Kavithai


திண்ணை

கிராமத்து வீடுகளில் திண்ணையில்லா
வீடு தேடினாலும் கிடைக்காது
பெரிய திண்ணை, சின்ன
திண்ணை ஒட்டுத் திண்ணை.
பெரிய மருது, சின்ன மருதுவாய்
மகுடம் தரிக்காத மகாராஜாக்கள்
ஆண்டு சரித்திரம் படைத்தவை;
ஒன்றா இரண்டா? எடுத்துச் சொல்ல மாளாது;
வெற்றிலைப் பெட்டியும், வெங்கலக்கூஜாவுமாக
திண்ணையில் உட்கார்ந்து
வயல்வரப்பு, மடவாய்ச்சண்டை,
அண்ணன் தம்பி குடும்பச் சண்டை
பாகப்பிரிவினை, பண்ணை ஆட்களுக்கு
பஞ்சாயத்து, கோர்ட்டுக்குப் போகாம
காசு வாங்காத நியாயமான கட்டப்
பஞ்சாயத்து நடக்கும்;
பிள்ளைகள் நிறைந்து ஒரு திண்ணை,
பள்ளிக்கூடமாய் ஆகிவிடும்;
சினா மாமாவீட்டுத் திண்ணையிலே
தினம் தினம் நடக்கும் சிட்டுக்கச்சேரி
சாயங்காலம் வரைக்கும் ஓயாது.

குருக்கள் வீட்டுத் "திண்ணையிலே விபூதி மந்திரிக்க,
தாயத்து, குறிகேட்க வரும் கூட்டம்,

தெருக்குழந்தைகளுடன்,
கட்டம், சோழி பல்லாங்குழி, கல்லாங்காய்,
புளியங்கொட்டை ஆட்டம்
ஆடும் சங்கரி அத்தை திண்ணை,
நாட்டுச்சேதி, வீட்டுச்சேதி
அரசியல் சேதி, அக்குவேறு ஆனி
வேறாக அலச
தெருவே கூடும், நியூஸ்பேப்பர்
மாமா வீட்டுத் திண்ணை.

வீட்டுப் பசங்க ராத்திரி,
திண்ணையிலே படுக்கிறேன்.
காத்துவரலே" "உள்ளே எனச்
சொல்லி, தலையணைமேலே வைத்துவிட்டு
இரண்டாம் பிளே சினிமாவுக்குப்
போக உதவிய திண்ணை.
காற்றாட உட்கார்ந்து களிப்பும்
சிரிப்புமா இயற்கைக்காற்றை
அணு அணுவா ரசித்து,
மகிழ்ந்திருந்த திண்ணை.

அத்தனையும் விட்டுவிட்டு
நாம் பட்டணத்துப்
பகட்டுக்கு ஆசைப்பட்டு ஓடிவந்து,
அலங்காரமாய் நிற்கும்
அடுக்குமாடிக் கட்டடங்களில்
மூடிப்போட்ட ஜாடியாய்
அடைபட்டு மூச்சு முட்ட சாத்திய
கதவுக்குள், காற்றை காசு
கொடுத்து ஃபேன், ஏஸி என வாங்கி
கரண்ட் போய், வியர்வை வெள்ளத்தில்
மூழ்கி, சோபாவில்
உட்கார்ந்தால், ஐயகோ! கூர்முள்ளாய்க்
குத்துது, குஷன் வைத்தசோபா!

கிராமத்துத் திண்ணை நினைவுகளில்
அலைபாயும் நெஞ்சில் ஏக்கம்வடியுது;
இனித் திண்ணையோடு வீடு கிடைக்குமா?
கிடைக்குமா?

குருதி உடுத்தி விடுதலை

குருதி உடுத்தி வலம் வருகிறாள்
விடுதலை!
வீரர் வீராங்கனையர் நெற்றியில் முத்தமிட்டு....
ஒற்றைச் சூரியனாய்க் கீழ்வானில்
முகம் உயர்த்தி
வெற்றிச் சுடரொளியில் தமிழீழ
முகம் மலர்த்தி (குருதி உடுத்தி)

கொத்திச்செல்வேன் எனக்
கொக்கரிக்கும் ராஜபட்சி
நீள் சிறகு துணிக்க
நெடுவானில் வாள் உயர்த்தும்
தோழர்களுக்குத் தமிழ்மாலை சூட,
காலவெளியில் ரத்தகானம்பாட (குருதி உடுத்தி)

துயிலும் மாவீரர் தொட்டில்களைத் தாலாட்ட
உயிரின் கனலில் விடுதலை ஒளிவார்த்து
விண்ணுக்கும் மண்ணுக்கும்
விரியும் ஒரு தீயாய்,
வீரர் வீராங்கனையர் மார்பூட்டும்
ஒரு தாயாய் (குருதி உடுத்தி)

விரல் துடைக்கும்
நீள்கின்ற கண்ணீரின் கோடுகளை,
விழிபொசுக்கும்
உடன்பிறந்த துரோகத்தின் காடுகளை
நுரைசிவக்கும் கடல் அலையே!
மறுகரைக்குச் சொல்க
நொறுங்காது தமிழீழம்
புலிப்படைதான் வெல்லும்! (குருதி உடுத்தி)

 
பட்டக் காலிலே படுமென்பார்

பட்டக் காலிலே படுமென்பார்கெட்டக் குடியே கெடுமென்பார்
பழமொழி சொன்னார் அந் நாளே
பார்த்தோம் சான்றாய் இந் நாளே
மீண்டும் மீண்டும் ஜப்பானில்
மிரட்டும் அதிர்வுகள பல ஊரில்


வேண்டுவோம் இயற்கைத் தாயிடமே
வேதனை செய்வதா சேயிடமே

பட்டது போதும் அவர் துயரம்
பறந்திட அங்கே பல உயிரும்
கெட்டது போதும் இனி மேலும்
கெடுவது வேண்டா ஒரு நாளும்
விட்டிடு பூமித் தாயே நீ
விழுங்க திறவாய் வாயே நீ
தொட்டது அன்னவர் துலங்கட்டும்
தொழில்வளம் முன்போல் விளங்கட்டும்

உழைப்பவர் அவர்போல் உலகில்லை
உண்மை முற்றிலும் ஐயமில்லை
தழைக்க வேண்டும் அவர் வாழ்வே
தடுத்தால் உனக்கும் அது தாழ்வே
பிழைக்க அன்னவர் வழி காட்டி
பூமித்தாயே கருணை விழி காட்டி
செழிக்கச் செய்வது உன் செயலில்
செழிப்பதும் அழிப்பதும் உன் கையில்

அணுவால் அழிந்தும் மீண்டவரே
அவருக்கு நிகராய் உண்டெவரே
துணிவே அவருக்குத் துணையாமே
தொழிலில் அதுவே இணையாமே
அணுவே இன்றவர் முன்னேற்றம்
அடையச் செய்தது பெரு மாற்றம்
பணிவாய் பூமித் தாய் உன்னை
பாடி முடித்தேன பா(ர்) அன்னை

ஒற்றையடிப் பாதை

புற்களுக்கு நடுவில்
அழகாய் நீண்டுச் சென்றிருக்கும்.
அதன் உருவகம் ஆச்சரியம்
தருபவையாகவே இருந்தது
கால்நடைகளும் கால்தடங்களும்
பூமியில் ரேகையிட்டு வைத்ததோ
என்று கூட எண்ணியிருக்கின்றேன்
ஊரைவிட்டு விலகி பிரதான பாதையிலிருந்து
கிளைத்து ஒரு நதியை போலவே
பயணித்து எல்லைகளை பிணைத்திருக்கும்
விபரம் அறியதுவங்கிய வயதுக்கு முன்
அதனுடன் சினேகம் இருந்தது
சைக்கிள் டயரை உருட்டி செல்வது
வாத்தியாருக்கு பயந்து தூரத்து
புளியமரத்தில் தஞ்சம்புகச் செல்வது
சக நண்பனுடன் சுற்றி திரிவது என்று
என் பால்யத்தின் தடங்கள் அப்பாதையில்
பதிந்து கிடந்தது.
அப்பாவிற்கு இன்னும் நெருக்கமாக
இருந்தது அப்பாவின் வேலைகளை
சுலபமாக்கவும் சாத்தியப்படுத்தவும்
இதுவே அதிகம் உதவியிருக்கும்
எப்போதும் அப்பாதைமண் அப்பாவின்
வெடித்த பாத இடுக்கில் ஒட்டிக்கொண்டிருக்கும்.
தாமதமாக வீடுதிரும்பும் ஆடுகளை கூட
இதுதான் அழைத்து வரும்
ஒற்றையடிப்பாதையை போலவே
பால்யத்தின் நினைவுகள்
மனவெளியில் நீண்டக் கோடாய்
பதிந்து கிடக்கின்றது அதன் வழியில்
சென்றால் திரும்பவும் பால்யத்திற்கே
சென்றுவிடுவோமா என்ற ஏக்கத்துடன்
அதன்றுகில் சாய்ந்த நாற்காலியில்
ஆடிக்கொண்டிருக்கின்றது கழிந்து
போன அகவைகள்.
பின்பற்றுதலையும் ஒன்றுபடுதலையும்
உணர்த்தியபடி புத்தனைபோலவே
மௌனமாய் உறைந்து கிடந்த
அப்பாதை இன்று இல்லை
"பெரிய" நிறுவனங்கள் மணலுக்காக
காடுகளையெல்லாம் வாங்கிக்கொண்ட
பின் ஒற்றையடிப்பாதையின்
தேவை நின்று போய் அழிந்து போனதாக
அப்பா சொன்னார்
பால்யத்தின் இளந்தடங்கள்
பதிந்து கிடந்த அந்த ஒற்றையடிப்பாதையை
மூடியபடி சென்றிருந்த கருத்த
தார்சாலையை பார்க்கையில்
நீண்டக் கல்லறையை போலவே தோற்றமளித்தது எனக்கு.

 
என் தியாகம்....

வானளவு சிந்தித்து ஊமையாகி போன உணர்வுகள்...
வேற்றினக் காரன் என்று தகுதியிழந்ததால்
காதலை வெறுத்த என்னவள் ஒருபுறம்,
இனத்தில் சேர் என்று அன்பாய் அரவணைக்கும்
என்னை ஈன்றவள் ஒருபுறம் என்று,
காரணங்காட்டி பிரிந்துபோன என் காதலில்
"தியாகம்" என்ற பெயருக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறது என் இயலாமை

காதல் விளையாட்டு

இருவருக்குமே வெற்றி என்பதெனில்
எனக்கும் சந்தோஷம்தான்.

நீ மட்டுமே வெற்றி பெறுவதானாலும்
நான் தோற்றுபோககூட
சித்தமாயிருக்கிறேன்.

ஆனால்,
இருவருமே தோற்றுபோவோம்
என தெரிந்த பின்னும்
ஏனடி இந்த காதல் விளையாட்டு.

விழுங்கித் தொலைத்த மானுடம்!!

"எங்கோ எதற்கோ விழுங்கித் தொலைத்த
மானுடம்..

இரந்து இரந்து
கொடுக்கத் திராணியின்றி
வாங்கத் துணிந்த மானுடம்..

களவு செய்து
கபடமாடி
கற்பு பறித்து; தொலைத்து;
கயவரோடு கூடி
காலம் போக்கும் மானுடம்..

எடுத்து வீசத் துணியாத
விட்டு ஒழிக்க இயலாத
உடலை -
பிடுங்கியும் புலம்பும்
பிரிந்தும் பிறரை நோவும்
சுயநல மானுடம்..

பகுத்துப் பாராத கேள்புத்தி -
அறுத்தெறிய முடியா ஆசைகள்
பிரித்துத் தர இயலாத மனசு
எடுத்துக் கொடுக்க வக்கின்றியும்
தனக்கு மட்டுமே ஓலமிடும் மானுடம்..

ஆறடி மிஞ்சாத மண் தின்று
காலடி பதியாத வாழ்க்கைக்கு
நோயிற்கும் பேயிற்கும் பயந்து
யாருக்கும் பயனின்றி - போகும் மானுடமே..

காலம் மென்று மென்று விழுங்கி
விதைத்த விதைப்பில் -
வாழ்ந்த அடையாளமின்றி மாளும்
மானுடமே.. மானுடமே..

எல்லாம் ஒழ்
எல்லாம் அற்
எஞ்சியிருக்கும் மனிதம் காக்கவேணும்
சுயநலம் குறைத்து வாழ்"
என்று சொல்ல -
எனக்கென்ன உரிமையுண்டோ; உன்னிடத்தில் மானுடமே!!

 
கணவன் மனைவி

காலையில் நீ தொலை பேசியில் உன் நண்பனுடன் உரையாடினாய்...
உன் முகத்தில் மகிழ்ச்சி, தொடர்ந்த சிரிப்பு..
உடனே கூறினேன், அடுத்த ஜென்மத்தில்,
உன் நண்பனாக பிறக்க வேண்டும் என்று..
அதற்கு நீ வேகமாக வேண்டாம் என்று தலையாட்டினாய்,
அதிர்ந்தேன்... உன் முகத்திலோ சிரிப்பு.. உடனே
அடுத்த கேள்வி கேட்டேன், அடுத்த ஜென்மத்திலும்
மனைவியாகவா??? நீ ஆம் என்று தலையாட்ட..
நானோ, வெட்கத்தில், சந்தோஷத்தில்,
ஏழு ஜென்மத்தையும் அனுபவித்தேன்...

என் வீட்டு கண்ணாடி

என் வீட்டு கண்ணாடியில்,
என் உருவம் தேட..
உன் முகம் காண்கிறேன்,
இது மந்திர கண்ணாடியா?
இல்லை,
ஒரு முறை உன்னை கண்டதனாலோ,
இவனும் என் போல,
உலகம் மறந்து விட்டான்,
கடமை தவறி விட்டான்..
நாளை,
ஜோடியாக நம்மை சுமக்கும் நாளில்,
கணம் தாங்காமல் உடைந்து போவானோ?

என்றும் மாறாதது

அன்பே உறவுகள் மாறி போகலாம்
உரிமைகள் விட்டு பறிபோகலாம்
கவலைகள் கூடி போகலாம்
உள்ளமும் வாடி போகலாம்

என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே

சுழல்காற்றும் திசைமாறி போகலாம்
அலைகடலும் கறைமீறி போகலாம்
சந்திரனும் சுடர்விட்டு எரியலாம்
சூரியனும் சூடு தணிந்து போகலாம்

என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே

நறுமணமும் நாறி போகலாம்
இணைந்த மணமும் இருதுருவமாகலாம்
உயர்ந்த நட்பும் உடைந்து போகலாம்
உயிர்கொடுத்தவளும் உதவாமல் போகலாம்

என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே

மாற்றமும் மாறி போகலாம்
காதலும் கசந்து போகலாம்
கானல் நீரும் தாகம் தணிக்கலாம்
பகற்கனவும் பலித்து போகலாம்

என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே

தருமமும் தவறி போகலாம்
சத்தியமும் சாய்ந்து போகலாம்
சாய்ந்த மரமும் துளிர் விடலாம்
கூறிய வாளும் குத்தாமல் போகலாம்

என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே

என் உணர்வுகளும் உறைந்து போகலாம்
உடலும் மெலிந்து போகலாம்
நாடி நரம்பும் தளர்ந்து போகலாம்
உயிரும் உடலை விட்டு பிரிந்து போகலாம்

என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே

 
மெல் லினம்..!

உன் முத்தத்தின்
சத்தம் என்னவோ
மெல்லினம் தான்..!
ஆனால்
அது உண்டாக்கும்
எதிரொலி தான்
வல்லினம்..!

வெட்கத் தை கேட்டால்...

ன்னிடம்
முத்தமொன்று கேட்டால்
நீ வெட்கத்தையே தருகின்றாய்...
உன் வெட்கத்தை
கேட்டால் நீ எதை தருவாய்
எனக்கு...

பட்டியலில் நான்...

நீ கல்லூரிக்கு
சென்று திரும்பும்
நாழிகையை
எதிர்பார்த்து
காத்திருப்போர்
பட்டியலில் நான்...

குனிந்த தலை
நிமிராமல்

பூமியை பார்த்தபடி நீ...
ஓர் பேரின்ப
சந்தோசம் என்னில்...
ஏதோ கிடைத்து
விட்டதுபோல்...

முகரும் நேரங்களில்...!!!

பிறக்கத் துடிக்கும்
ஒவ்வொரு
வினாடிகளும்
இறந்து
விடுகின்றன..!!!

நீ மூச்சி
முகரும்

நேரங்களில்...!!!

 
<< Start < Prev 1 2 3 4 Next > End >>